பா.கே.ப!!!
ஏதோ கெட்ட வார்த்தைனு தப்பா நினைச்சிடாதீங்க. வாரமலரில் வாராவாரம் அந்துமணியின் பார்த்தது கேட்டது படித்தது என தொடராக வந்தது(முன்னாடி படிச்சிருக்கேன்)…இப்பவும் வருது(நேற்றுதான் இணையத்தில் பார்த்தேன் – http://www.dinamalar.com/2008apr06varamalar/index.asp)… நாமும் இப்படி ஏதாவது பகிர்ந்துகிலாமேனுதான் இந்த பா.கே.ப.
பார்த்தது:
மங்களூர் நகரத்தில் இருந்து “முடிப்பு” கிராமம் வரை பேருந்து பயணத்தின் போது பார்த்தது.
அபார்ட்மண்ட் கீழே மாடர்ன் நைட்டி போட்டுகிட்டு ஒரு அக்கா (???) அவங்க பையனை மாருதி ஆம்னியில் பள்ளிக்கு அனுப்புறாங்க.
கானாச்சூர் பிரைவேட் லிமிடட் கம்பெனி வாயிலில் அப்பாவோடு பள்ளி செல்ல பேருந்திற்காக காத்திருக்கும் அக்கா, தம்பி.
சின்னதா ஒரு திண்ணை, வீட்டு வெளிச்சுவற்றில் கரும்பலகை. அதுக்கு எதிர்த்தாப்பில் ஒரு மரபெஞ்சில் வரிசையாக, முகம் மட்டும் தெரியும்படி பர்தா அணிந்த ஐந்து ஆறு சிறுமிகள். குல்லா, லுங்கி சகிதம் அவர்களுக்கு பாடம் எடுக்கும் வாத்தியார்.
மூன்று சிறுவர்கள், ஒரு சிறுமி – இடிந்து போன ஒரு நுழைவாயிலைத் தாண்டி. சின்ன காடு போன்ற இடத்திற்குள் முதுகு காட்டி நடந்து செல்கின்றனர். ஒரே ஒரு சிறுவன் மட்டும் பள்ளி சீருடை அணிந்திருந்தான்.
கேட்டது:
” நாக்க முக்க” புகழ் “காதலில் விழுந்தேன்” படத்தில் நல்ல கவிதைகளுடன் ரொம்ப நல்ல பாடல்கள் உள்ளன. குறிப்பா “தோழியா என் காதலியா”, “சொல்லடி என் இதயம்” இந்தப் பாடல்கள்.
“தோழியா என் காதலியா” பாடலில் இருந்து
இருட்டுகுள்ளே தனித்து நின்றேன்
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவைப் போலே மாட்டிக் கொண்டேன்
இறுதி சடங்கில் மிதிகள் படும்
பூவைப் போல் கசங்கி விட்டேன்
தெய்வம் பூமிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கொரு தாயை உன் உருவில் தந்து விட்டான்
படித்தது:
எஸ்.ராமகிருஷ்ணன் அவரது வலைப்பூவில் கவிஞர் நகுலன் பற்றியும் அவரது பத்து கவிதைகளும் போட்டிருந்ததை படித்தேன். மிகவும் வித்தியாசமான ஒரு மனிதராக தென்பட்டார் நகுலன். அவரது சில கவிதைகள் இங்கே…
***
வந்தவன் கேட்டான்
`என்னைத் தெரியுமா ? `
`தெரியவில்லையே`
என்றேன்
`உன்னைத்தெரியுமா ?`
என்று கேட்டான்
`தெரியவில்லையே`
என்றேன்
`பின் என்னதான் தெரியும்`
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்.
***
அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத்தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக்குரல்
ஒலிக்கிறது
நண்பா அவள்
`எந்த சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள் ?`
***
இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்
**
எனக்கு
யாருமில்லை
நான்
கூட..
***
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.
***





